No results found

    எந்த ஓரையில் எதை செய்யலாம்... எதை செய்யக்கூடாது...


    அறிவியல் கணக்குப்படி இரவு 12 மணி முதல் மறு நாள் இரவு 11.59 மணி வரையான நேரத்தை, ஒரு நாள் என்கிறோம். அதே நேரம் ஜோதிட கணக்குப்படி சூரியன் உதிக்கும் நேரத்தில் இருந்துதான் நாள் தொடங்குகிறது. அதன்படி காலை 6 மணி முதல் மறுநாள் காலை 5.59 மணி வரை, ஒரு நாள் ஆகும். ராகு, கேது தவிர மற்ற 7 கிரகங்களும், நாள் ஒன்றுக்கு 4 மணி நேரம் தங்களின் கதிர்களை, ராசிக்காரர்கள் மீது வீசி அதற்கேற்ப பலன்களைக் கொடுக்கின்றன. இந்த கதிர்வீச்சு நேரத்தை 'ஓரை' என்கிறோம்.

    ஜோதிடக் கணக்குப்படி சூரியன், சுக்ரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என்ற ரீதியில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு கிரகத்தின் ஓரை நடைபெறும். ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு ஓரை உரிமையானது. அந்த நாளில் அந்த ஓரையைக் கொண்டுதான் நாள் தொடங்கும். உதாரணமாக ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு உரியது. அந்த நாளில் சூரிய ஓரையுடன் தான் நாள் தொடங்கும். அதன்பிறகு சுக்ரன், புதன், சந்திரன், குரு, செவ்வாய் ஓரைகள் தொடர்ந்து வரும். அதன்பிறகு மீண்டும் சூரியன், சுக்ரன் என்று இந்த வட்டம் சுழலும். இப்படி ஒவ்வொரு நாளும், அந்தந்த கிழமைக்குரிய கிரகத்தின் ஓரையுடன்தான் நாள் தொடங்கும்.

    ஓரைகளையும், அவற்றிக்கான பலன்களையும் இங்கே பார்க்கலாம். சூரிய ஓரை: எல்லாவற்றுக்கும் முதன்மையானது சூரியன். அந்தக் கோள் 'ராஜகிரகம்' என்று அழைக்கப்படுவதால், அரசு சார்ந்த செயல்களைச் செய்ய இந்த நேரம் ஏற்றது. வழக்கு தொடர்பான முயற்சிகளை மேற்கொள்வது, உயர் பொறுப்பில் உள்ளவர்களை சந்திப்பது, சொத்துக்கள் தொடர்பான முடிவு எடுப்பது என முயற்சிகளை மேற்கொள்வதற்கு இந்த ஓரை மிகச்சிறப்பானது. அதே நேரம் சூரிய ஓரையில், புதிய முயற்சி களுக்கான ஒப்பந்தங்களை முடிவு செய்யக்கூடாது. நல்ல செயல்களை மேற்கொள்ள இந்த ஓரை சிறந்தது அல்ல. குறிப்பாக புதிய வீட்டிற்கு குடிபோகக் கூடாது.

    சந்திர ஓரை: திங்கட்கிழமை, சந்திர ஓரையை தொடக்கமாக கொண்டு செயல்படும் நாள். வளர்பிறை காலத்தில் வரும் சந்திர ஓரைகள் நற்பலன்களை வழங்கும். இந்த ஓரையில் திருமணத்துக்கு நாள் குறித்தல், பெண் பார்த்தல், ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்குதல், கல்வி, கலைகளை கற்கத் தொடங்குதல், நெடுந்தொலைவு பயணம் புறப்படுதல், கால்நடைகள் வாங்குதல் போன்றவற்றைச் செய்யலாம். பொதுவாக இந்த ஓரையில், அனைத்து வகையான நற்காரியங்களையும் செய்யலாம். தேய்பிறை காலத்தில் வரும் ஓரையில் செய்யும் காரியங்கள் அவ்வளவு பலன்களைக் கொடுக்காது. சுக்ர ஓரை: வெள்ளிக்கிழமையில் இந்த ஓரையில்தான் நாள் தொடங்கும். ஆண் - பெண் உறவு, அழகு, கவர்ச்சி, தூய்மை, பொருளாதாரம் ஆகியவற்றை சுக்ரன் வழிநடத்துகிறார். எனவே இந்த ஓரை நேரத்தில் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ளலாம். ஆண்- பெண் உறவிற்கு, மருந்து சாப்பிட, கடனை மீட்டெடுக்க, புதிய ஆடை, அணிகலன் வாங்க ஏற்ற நேரம் இது. குறிப்பாக பெண்கள் தொடர்பான காரியங்களை மேற்கொள்ள சிறப்பான ஓரையாக, சுக்ர ஓரை பார்க்கப்படுகிறது. நிலத்தை உழவு செய்வதற்கும் இந்த ஓரையை தேர்வு செய்யலாம்.

    சனி ஓரை: சனிக்கிழமையை முதன்மையான கொண்ட ஓரை இது. சனி பகவான், ஆயுள், தொழில், முற்பிறப்பு பலன் ஆகியவற்றின் வழிகாட்டி. தீயவற்றில் எல்லாம் தீயது, கொடிய நேரத்தைத் தரும் ஓரை இது. ஆனாலும் இந்த ஓரையில், நிலம், சொத்து தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். நிலத்தை உழுதல், இரும்பு, மின்சாரப் பொருட்களை வாங்குதல், தோப்பு, கிணறு அமைத்தல் போன்ற காரியங்களை சனி ஓரையில் செய்யலாம். குரு ஓரை: வியாழக்கிழமையில் முதல் ஓரையாக இது தொடங்கும். அனைத்துவிதமான காரியங்களைச் செய்யவும், சிறந்ததாக இந்த குரு ஓரை திகழ்கிறது. அதே போல் தீய செயல்களை இந்த நேரத்தில் செய்தால், கொடிய கேடான பலன் வந்து சேரும். குரு ஓரை நேரத்தில் திருமணத்திற்கான தாலி செய்ய தங்கம் வாங்கலாம். சுப காரியங்களுக்கான ஆடை, அணிகலன்களை வாங்குவதும் நல்லது. தங்கம் தொடர்பான வேலைகள் மற்றும் புதிய தொழில் தொடங்குவதற்கு இந்த ஓரை நேரம் ஏற்றதாகும்.

    முதலிரவு, விதை நடுதல், நாற்று நடுதல், சேமிப்பு கணக்கு தொடங்குதல், தொழில் தொடங்க பொருள் கொள்முதல் செய்தல் போன்ற காரியங்களையும் இந்த ஓரையில் செய்யலாம். செவ்வாய் ஓரை: செவ்வாய்க்கிழமையில் முதல் ஓரையாக இந்த ஓரை வரும். ரத்தம், மருத்துவம், புவி, நெருப்பு மற்றும் அதிகாரம் போன்றவற்றிக்கு உரியவராக செவ்வாய் திகழ்கிறார். எனவே இந்த ஓரையில் நற்காரியங்களை செய்தல் கூடாது. எந்த ஒரு புதிய செயலையும் தொடங்க வேண்டாம். இந்த ஓரையில் போர் தொடுத்தல், போர்க்கருவிகள் செய்தல், வண்டிகளை பழுது நீக்குதல், வீடு மனை நிலம் வாங்குதல் மற்றும் விற்றல், மருந்து சாப்பிடுதல், ஏரிக்கரை மேம்படுத்துதல் மற்றும் அணை கட்டுதல் போன்ற பணிகளைச் செய்யலாம். புதன் ஓரை: புதன்கிழமையானது, இந்த ஓரையில்தான் தொடங்கும். புதன் என்பதற்கு அறிவன் என்றும் பொருள் உண்டு. எனவே இந்த ஓரையில் அறிவுசார்ந்த செயல்களை செய்வது சிறப்பான பலன்களைத் தரும். அறிவியல் ஆராய்ச்சி களை மேற்கொள்வது, ஜோதிடம் கணிக்கத் தொடங்குவது, தேர்வு எழுதுவதற்கான வேலைகளைச் செய்வது, போட்டிகளில் பங்கேற்பது, கடிதத் தொடர்பு மேற்கொள்வது, தொழில்நுட்பம் சார்ந்த புதிய பொருட்களை வாங்குவது, புதிய கணக்கு தொடங்குவது போன்ற செயல்களை இந்த ஓரையில் செய்யலாம். நற்செயல்களைச் செய்ய சிறந்த ஓரை இது.

    Previous Next

    نموذج الاتصال